"முயற்சி நம் உணவு என்றால் வெற்றி நமக்கு விருந்தாகும் "
அப்படிப்பட்ட உணவுக்கு நம் வாழ்க்கையில் அளித்த இடம் தான் என்ன? எப்படிப்பட்ட உணவை உண்டால் ஆரோக்கிய வாழ்வு வாழ்வோம் என்று நன்கு உணர்ந்து நமக்காக இயற்கை உணவுகளை தயாரித்து வருகிறார் அனுராதா பாலாஜி. கடந்த 7 வருடங்களாக இத் தொழிலில் ஈடுபட்ட அனுராதா, தனது சொந்த நிலத்தில் இயற்கை விவசாயத்தில் பெறப்பட்ட தயாரிப்புகளைக் கொண்டு நெல்லி சாறு, நெல்லிக்காய் தேன், பற்பொடி மொரிங்கா தூள், பேஸ் பேக் முதலியவை தயாரித்து விற்பனை செய்துகொண்டு வருகிறார்.
தனது தயாரிப்புகளில் முக்கியமாக நெல்லி சாறு, நெல்லிக்காய் தேன் முதலியவற்றை நம் முன்னோர்கள் பின்பற்றிய பாரம்பரிய வழக்கப்படி கையாண்டு வருவதாகவும் மேலும், அதில் வெள்ளை சர்க்கரையோ அல்லது பதப்படுத்தும் முறையோ என எதையும் கையாளுவது இல்லை என்கிறார் அனுராதா. இதனை பயன்படுத்தும் பட்சத்தில் தயாரிப்புகளில் உள்ள இயற்கை தன்மை மாறும் வாய்ப்பு உள்ளதாகவும் தனக்கு பொருளின் இயற்கைத் தன்மையும் தரமுமே முக்கியம் என்கிறார் அனுராதா. நமக்கு தீங்கு விளைவிக்காத உடலுக்கு நன்மை தருகிற மற்றும் நம் முன்னோர்கள் பாரம்பரியமாக பயன்படுத்தி வரும் நாட்டுச் சர்க்கரை, தேன், கருப்பட்டி என இவைகளை தனது தயாரிப்பு பொருட்களில் பயன்படுத்துகிறார்.
இரசாயனம் கலந்த டூத் பேஸ்ட்டை அறவே ஒதுக்கி கருவேலம்பட்டை, நாயுருவி, கொய்யா இலை, கிராம்பு ஆகியவையாளான பற்பொடியையே இவர் பயன்படுத்தி வருகிறார். தானும் தன் குடும்பமும் மட்டும் நன்றாக வாழ்ந்தால் போதுமா? என்று எண்ணிய அனுராதா இதையே தொழிலாக மாற்றி மக்களிடமும் கொண்டு செல்ல வேண்டும் என்ற முயற்சியே, இன்று அவருடைய வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது.
முருங்கை தலை கொண்டு ஃபேஸ் பேக், முல்தானிமெட்டி என அனைத்தையும் இயற்கை முறையில் செய்து அசத்திக் கொண்டு வருகிறார் அனுராதா.
தூண்டுதல் இருந்தது, துணிச்சல் பெற்றேன் உயர்வதற்கு!!
தமக்கு இத்தொழிலை ஆரம்பிக்கும் ஆர்வம் எப்போது வந்தது என்று கேட்டபோது, அவர் வெளிநாட்டில் பத்து வருடங்களுக்கு மேலாக இருந்ததாலும், இயற்கை உணவின் மீது ஆர்வம் பெற்றதாலும், தமது குழந்தைக்கு இயற்கையான உணவை வழங்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருந்ததாலும், அவர் இதனை முதலில் வீட்டிலேயே இயற்கையான பொருட்கள் கொண்டு இதனை செய்ய தொடங்கியதாக கூறிய இவர்,
“பல வீடுகள் சேர்ந்ததே சமுதாயம் என்கிறார். சமுதாய சீர்திருத்தம் ஒவ்வொரு வீட்டின் பெண்கள் கைகளில் இருப்பதாகவும் கூறுகிறார்”.
இவ்வண்ணமே தன் உற்பத்தியை பெருக்கவும் மற்றும் சமுதாயத்தில் உள்ள மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதற்கு காரணமாக அமைந்தது. தனது குடும்பத்தினரும் இவரின் அனைத்து முயற்சிக்கும் உற்சாகமூட்டும் வழியில் இருந்ததாகவும் குறிப்பிடுகிறார்.
அனுராதா சந்தித்த சவால்கள்:
தனக்கு பெரும் சவாலாக இருந்தது தனது தயாரிப்புகளின் முக்கியத்துவத்தை கூறி அதனை சந்தைப்படுத்துதல் என்கிறார்.
“நோய் நொடியற்று வாழும் வாழ்வைத் தரும் நெல்லி, இதன் மதிப்பை உணராத சுவை கேட்கும் நாக்குகள்”.
“கசப்பே மருந்து” என்று நம் முன்னோர்கள் சும்மாவாகவா சொல்லி உள்ளார்கள்.
தொலைக்காட்சி பத்திரிகைகள் என அசத்தும் அனுராதா:
அவர் எந்த சமூக வலைத்தளங்களிலும் சந்தைப்படுத்த எண்ணியதில்லை என்றும் பெமினைன் , க்ரீன் விகடன் போன்ற பத்துவிதமான பத்திரிகைகளிலும் தொலைக்காட்சி சேனல்களிலும் நேர்காணல் உரை கொடுத்ததாகவும் அது பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் இடம்பெற்றிருக்கிறது என்கிறார்.
“உடல் சீராக இருந்தால்
மனமும் சீராக இருக்கும்”.
உடலையும் மனதையும் தூய்மையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும் இயற்கை உணவுகளை நாடுவோம்; வாழ்வில் வளம் பெறுவோம்!