நலினியுடன் டெரகோட்டா ஜுவல்லரிக்கு பயணம் செல்வோமா
![](https://takecareinternational.org/wp-content/uploads/2021/08/WhatsApp-Image-2021-08-05-at-11.15.42-AM-768x369.jpeg)
கண்டுப்பிடிப்புகள் தொடங்கியது தேவைகள் காரணமாக; நலினியின் தேவை, அவரை தொழிலதிபர் ஆக்கியது.
“கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்; கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்.”
நலினி ஆரம்பத்தில் மாணவர் பயிற்சி மையத்தில் ஆசிரியையாக பணி புரிந்தவர். நேரத்தை நல்வழியில் செலவழிக்கவே அங்கு பணிபுரிந்து வந்தவர், கொரோனா அலை பல மக்களின் வேலையை பாதித்ததுபோலவே,இவர் பணியிலிருந்து நின்றதற்கும் காரணம் ஆகிவிட்டது. கெட்டதிலும் நன்மை இருக்கும் என்று சொல்வார்களே, அதுபோல இந்த கஷ்டமும் நந்தினியின் பல்செயல்திறனை வெளிக்கொண்டு வந்தது. தனது வீட்டிலே டெரக்கோட்டா ஆபரணங்கள் செய்யும் தொழிலை ஆரம்பித்தார்.
அவர் இத்தொழிலில் முன்னேற்றம் அடைவதற்கு அரும்பாடுபட்டு உழைக்கிறார். சமூக ஊடக வலைத்தளங்களில் தனது தயாரிப்புகளை படங்களாக எடுத்து அதனை அனைவருக்கும் தெரிய வைக்க வேண்டும் என்றும் முயற்சிகள் எடுத்து வருகிறார். தனக்கு தெரிந்தவர்கள், தோழர்-தோழிகள், சகோதர-சகோதரிகள், அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் ஆகியோரின் அங்கீகாரம் பெற்றதோடு, இவரின் முயற்சிக்காகவும் கடுமையான உழைப்புக்காகவும் நற்பெயரும் பாராட்டும் பெற்றுள்ளார்.
ஆற்றல் மட்டும் போதும் அரும்பாடுபடுவேன்:
நலினி இதனை செம்மண் போன்று இருக்கும் இயற்கையான களிமண்ணைக் கொண்டு தயாரிக்கின்றார். ஆற்றல் மட்டும் போதும் அரும்பாடுபடுவேன் என்று கூறும் இவர் ஒரு டெரக்கோட்டா ஆபரணம் செய்ய ஒரு வாரம் எடுக்கும் என்றும் கூறுகிறார். இதனை பிடித்து, பிசைந்து, உலரச் செய்து, வெப்பமாக்கல் செயல் முறைக்கு உட்படுத்தி மறுபடியும் உலர்த்தி, சுத்தம் செய்த பின்னரே இதனை வர்ணங்கள் தீட்டி அழகுபடுத்த முடியும் என்கிறார்.
இயற்கையுடன் சார்ந்து வாழ்வோம்:
உலகை மாசுபடுத்தும் திரவங்களை தடுத்து செல்வோம் இயற்கைப் பாதையில் என்று கூறும் நலினி, இவ்வகை டெரகோட்டா ஆபரணங்கள் இயற்கை சூழலுக்கும், உடலுக்கும் தீமை பயக்காது என்கிறார். இது உலகின் பழமையான செயல்முறையை கொண்டுள்ளதால் இது நம் பாரம்பரியத்தை அறியவும் உணரவும் வைக்கின்றது.
![](https://takecareinternational.org/wp-content/uploads/2021/08/WhatsApp-Image-2021-06-27-at-3.37.43-PM-1-768x1024.jpeg)
டெரகோட்டா ஆபரணங்களை தேர்ந்தெடுப்பதற்கான காரணங்களில் சில முக்கியமானவை:
• இவ்வகை ஆபரணங்கள் நம் பொருளாதாரத்துடன் ஒத்துப் போகக் கூடியவை. அழகிய பல வண்ணங்களும் வடிவங்களும் கொண்டு செய்யப்படும் இவை, கண்களுக்கு கலை இன்பத்தை தரக்கூடியவை.
• தற்போதைய சூழலுக்கும் இயற்கைக்கும் தீங்கு விளைவிக்காதவை.
• இவ்வகை ஆபரணங்கள் எளிய எடையும், துடிப்பான அழகான சாயல்களையும் கொண்டவை மற்றும் அன்பான கரணங்கள் கொண்டு செய்யப்படுபவை.
எளிய விலையில் நிறைந்த ஆனந்தம்:
நலினியின் தேவைக்கு நாம் ஆற்றும் பங்கு, சமூகத்திற்கு அளிக்கும் சேவை போன்றது. நம் வரலாறு முக்கியத்துவம் அளித்த கலைக்கும், ஓவியத்திற்கும் நலினி முக்கியத்துவம் அளித்து தன் வாழ்க்கையின் ஒரு அங்கமாக இதனை உருவாக்கியுள்ளார். தான் செய்யும் தயாரிப்புகளுக்கு எளிய விலை நிர்ணயம் செய்து, இவ்வகையில் சமூகத்திற்கு தன் பங்கை ஆற்றி வருகிறார் நலினி.
“இயற்கை தரும் பொருட்களுக்கு முக்கியத்துவம் வழங்குவோம்;
நம்மவரை உயர்த்துவோம்”.